குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Saturday, June 14, 2014

ஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....

தோழர்  "ரைட்டர் நாகா" அவர்களுக்கு வணக்கம்,

தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த "ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்" என்ற தங்கள் புத்தகத்தின் முதல் பிரதியைப்  படித்தேன். தங்கள் எழுத்துக்களிலுள்ள உயிரோட்டத்தைப் பார்த்த அந்த நொடியில் அகம் மகிழ்ந்தேன். அதனால் சுயம் தொலைத்தேன். தங்களை நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை ஆனாலும்   தங்களுக்கு நான்கைந்து முறை தொலையாடிப் பேசியிருக்கிறேன். தங்களின் மெதுவான பேச்சு, பேச்சிலுள்ள லாவகம், பேச்சினூடே தாங்கள் இலைமறை காயாக சொல்லும் தகவல்கள் போன்றவற்றை கேட்ட மாத்திரத்திலே "மொழி" திரைப்படத்தில் மண்டையில் மணி அடிப்பது போன்று  எனக்கும் ஒரு சத்தம் கேட்டது. மிக அருமையான சத்தம் உன்னித்து என் சிந்தையை கூர்மையாக்கி கேட்டதில் அந்த சத்தம் சில நொடிகள் ஒப்பாரி சத்தம் போலவும், சில நொடிகள்  பறை கொண்டடிக்கும்  சாவு மேளம் போலவும், பிகர்களுடன் கடலை போட்டுக்கொண்டிருக்கையில் இடையினூடே வரும் ஆன்டிகளின் கிராஸ் டாக் போலவும் தெளிவில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதே நான் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் தங்கள் மிக விரைவில் மிகச்சிறந்த எழுத்தாளனாகி ரைட்டர் ஆவீர்கள் என்று. ஞானிகள் சொல் பலிக்காமல் போகாது என்பார்கள்.

கடந்த சில காலங்களாக தங்களிடம் சரிவர தொலைபேச முடியவில்லை. தங்களைத் தொடர்பு கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தோல்வியிலேயே வெற்றிகரமாக முடிந்தன. அப்பொழுது தான் நான் தாங்கள் தங்களைச் செம்மையாக்கி, சீர்படுத்தி, சிகையலங்காரம் செய்து ஒரு சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் ரைட்டர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கலாம் என்று என்னை அறியாமல் எண்ணிக்கொண்டேன். ஒரு வேளை அக்காலகட்டத்தில் தங்களை நான் தொந்தரவு செய்திருந்தால் தாங்கள் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய ரைட்டர் ஆக முடியாமல் போயிருக்கலாம். எந்திரன் படத்தில் வரும் ரஜினி  ஐஸையும் மறந்து வசீகரன் என்ற ரோபோ ரஜினியை குளோனிங் செய்து உருவாக்கியது போன்று தாங்கள் அனைவரையும் மறந்து ஆற்றங்கரை, குளத்தங்கரை, மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் விடுதிவாசல்கள் போன்ற இடங்களில் காத்திருந்து அனைத்தையும், அனைவரையும்  மறந்து எழுத்தாளர் ஆவதற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் முயற்சிகள், உழைப்புகள் போன்றவற்றை நான் கேள்விப்பட்ட வேளையில் உள்ளம் உடைந்து வெந்து வெம்பிப்போனேன் தோழரே. 

இப்படி வெம்பிப்போன மனதுடன் தும்பிகளை துணைக்கழைத்து கொஞ்சிக் குலாவி கொண்டிருந்த நல்லதொரு வேளையில், பொழுதினில், நேரத்தில் சமயத்தில் தான் தாங்கள் எழுதிய இலக்கிய செறிவு வாய்ந்த படைப்பைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள வெட்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ இல்லை. 

இனி தங்கள் இலக்கிய செறிவு மிகுந்த "ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்" புத்தகத்திற்கு  வருவோம்..

தோழரே தங்கள் நூலின் முதல் வரியையே "அங்கிங்கெனாதபடி" என்று ஆரம்பித்தது தான் எனக்கு  அளப்பரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாங்கள்  சாயங்காலம், மழைக்காலம், வெயில்காலம் போன்ற எத்தனை விதமான காலங்களிலுள்ள ஏடுகளையும் கல்வெட்டுகளையும் புத்தகங்களையும் இணைய பக்கங்களையும் புரட்டியிருப்பீர்க்ள என்பதை நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறது. ஆகையால் கொஞ்சம் பொறுத்திருங்கள் தோழரே நீர் அருந்திவிட்டு வருகிறேன். 

நிற்க...

மீண்டும் வருவோம் முதல் வரிக்கே... தங்கள் கட்டுரையின் முதல் வரியிலையே நான் பார்த்த மாத்திரத்தில வாய்திறந்து சுவாசிக்க வைத்த இன்னொரு விஷயம் ஊழல் என்ற வரத்தை தான். சம கால இலக்கியத்தை தாங்கள் ஒரு கோப்பை டம்ளரில் அடக்கி வைத்திருக்கும் தாங்கள் சமகால அரசியலையும் அதில் இரண்டறக்கலந்த ஊழல் பற்றி தெரிய வேண்டுமானால் தாங்கள் அரசியலில் எத்தனை பழங்களை தின்று கோட்டை போட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு விழி பிதுங்குகிறது. 

அடுத்தடுத்த வரிகளை பற்றி எனக்கு என்னசொல்வது என்றே தெரியவில்லை தோழரே. புத்தகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வரும்  உணவு, உடை, இருப்பிடம் என்பன பற்றிய விளக்கங்களையும் அவற்றை தாங்கள் கையாண்ட விதத்தையும்  படிக்கும் போது தங்களின் வாரிக்கொடுக்கும் வள்ளல் குணம் எனக்கு தெரியவந்தது. அதற்கடுத்த வரிகளில் தாங்கள் எழுதியிருக்கும் சிலவார்த்தைகளை பார்க்கும் போது யாரையோ கன்னாபின்னாவென்று திட்டுவது போன்று தோன்றியது, அதுவே எனக்கு தங்கள் மிகவும் கோபக்காரர் என்பதையும் சொல்லாமல் சொல்லிற்று. 

அதற்கு பிந்தைய வரிகளை எவ்வளவு தரம் வாசித்தும் என் சிறு மூளையின் ஒரு மூலைக்கு கூட எதுவும் பிடிபடவில்லை. தமிழ் போன்ற சாயலில் வேற்று மொழிகள் கலந்து எழுதலாம் என்பதையும் அங்கு தான் நான் தெரிந்து கொண்டேன். எனக்கு எஸ்பாநெல் மொழியில் எழுதும் ஒரு தோழரை நன்றாகத் தெரியும். அவரின் எழுத்துக்களை படித்துப் படித்து தற்போது சிறிதளவு எஸ்பாநெல் மொழிக் கட்டுரைகள் என்னால் படிக்க முடிகிறது. ஆனால் தங்களின் இந்த கட்டுரையின் பிந்தைய பகுதிகளை  நான் இதுவரையில் கேள்விப்படாத ஒரு மொழியில் தான் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். இவற்றை எல்லாம் பார்த்தால் நாம் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.  ஆகையால்  அமேசான் காடுகளில் மட்டுமே வசிக்ககூடிய அறிஞரும் புலவருமான  "எவரோமார்டினோ" என்ற மகானுக்கு தங்கள் புத்தகத்தை ஆராய்ச்சிக்கு அனுப்பலாம் என்று  ஒரு மனதுடன் முடிவு செய்திருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். தற்கால எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு தான் தன் சக எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பற்றி புகழ்ந்து பேச மனது வரும். அந்த விசயத்தில் தாங்கள் மாமனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஐயா. கடந்த நூற்றாண்டில இளையர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருந்த "சரோஜாதேவி" வகை புத்தகங்களையும் அவற்றின் தரத்தை பற்றியும் அவற்றால் தாங்களடைந்த பயனைப்பற்றியும், அதை எழுதிய எழுத்தாளர்களை பற்றியும் தாங்கள் சிலாகித்து எழுதியிருப்பதைப் பார்த்த போது தான் தங்களின் வாசிப்பு திறனையும், அதோடு நின்று விடாமல் அந்நூலின் ஆசிரியர்களை பாராட்டிய உயர்ந்த எண்ணத்தையும் அறிந்து கொண்டேன். 

இவற்றையெல்லாம் வைத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஆண்டடிகளை சைட்டு அடிக்கும் தொலை நோக்கு பார்வையுடன் கொஞ்சம் தூரமாக நின்று பார்த்தால் தாங்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் வருவதேயில்லை. 

மன்னிக்கவும்  தோழரே  தங்களை பற்றியும், தங்களின் எழுத்துக்களைப் பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டும் போல தான் தோன்றுகிறது ஆனால் தங்களின் அந்த இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிக்க புத்தகத்தை  பற்றி யோசிக்கும் தருவாயில் கூடவே கொலை மற்றும் தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து தொலைக்கின்றன ஆகையால் என் உயிருக்கு பயந்து நான் இந்த புலம்பலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.  

"மீண்டும் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்"
நன்றி. 
ஜெயந்த் கிருஷ்ணா,
சிங்கப்பூர்.

5 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

:)

TERROR-PANDIYAN(VAS) said...

:)

செல்வா said...

ஒரு எழுத்தாளன் ஒரு வாசகனை எவ்வளவு வசீகரிக்கிறானோ அந்த அளவிலானது சுக்கு காபி. காபி என்பது நாம் பருகும் டீயைப் போன்றது. மேலுள்ள கடிதம் இதற்கு மாறானது என்றாலும் நமக்கு சுவையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் தோழர்.

NaSo said...

வாழ்த்துக்கள் யாருக்குங்க தோழர்?

செல்வா said...

//வாழ்த்துக்கள் யாருக்குங்க தோழர்?//

அது வேறு ஒரு எழுத்தாளருக்குச் சொல்ல வேண்டியது. தவறுதலாக இங்கே வந்துவிட்டது. மன்னித்தருளல் வேண்டும்.