குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Wednesday, February 1, 2012

ஆனந்த தொல்லை


ஊருக்கு வடக்கு ஓரத்தில் அமைந்திருந்த அம்மன் சன்னிதிக்கு நிழல் வழங்கி, தனக்கு கீழ் புற்களைக் கூட முளைக்க விடாத அளவு அடர்ந்து வளர்ந்திருந்த ஆல மரத்தின் அடியில் ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். நேற்று பிறந்த குழந்தையிலிருந்து இன்னைக்கோ நாளைக்கோ என இருக்கிற பெருசுகள் வரை அந்தக் கூட்டத்தில் அடக்கம். எல்லோருடைய முகத்திலும் பயம், பீதி மற்றும் கவலை ரேகைகள். தானே புயலின் வீச்சையும் அணிலின் நடிப்பையும் கேப்டனின் அறிக்கைகளையும் தாங்கியவர்கள் தான் அந்த கிராமத்து மக்கள். ஆனால் அவர்களாலேயே தாங்க முடியாத அளவில் பேரழிவாக பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை அவர்களை நோக்கி வருவது தெரிந்து அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கவே அங்கே திரண்டிருந்தனர்.



ஆனந்த தொல்லை எப்போது வரும் எப்படி வரும் எனத் தமிழ் நாட்டில் யாராலும் யூகிக்க முடியவில்லை. ஆனால் அந்தக் கிராமத்துக்கு அருகில் இருக்கும் சினிமா தியேட்டர் ஓனர் நம் பவர் ஸ்டாரின் நெருங்கிய நண்பராம். அவர் மற்ற இடங்களில் ஆனந்த தொல்லை ரிலீஸ் ஆகும் முன்பே இங்கே ரிலீஸ் செய்யப் போவதாக ரகசியத் தகவலை வெளியே கசிய விட்டுள்ளாராம். எல்லோருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியமாய் இருக்கும் என்று அதிமேதாவித்தனமாய் யாரும் கேட்காமல் எல்லோரும் அமைதி காத்து நாட்டாமை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

நாட்டாமையாகப்பட்டவர், டிப்பிகல் தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமை போலில்லாமல் சட்டை அணிந்து வெற்றிலை போடாமல் அருவா மீசை வைக்காமல் யோசிக்கும் திறனும் கொண்டிருந்தார். சிறிய யோசனைக்குப் பின், அருகில் அமர்ந்திருந்தவரிடம் கேட்டார், எப்போ படம் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்?. அதற்கு அவர், தெரியலைங்க, ஆனால் அரசின் இலவசக் காப்பீட்டுத் திட்டம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணப் போறதா சொல்லறாங்க..



ஐயா, நாமெல்லாம் ஆனந்த தொல்லை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு ஏன் ரோட்டை குறுக்காட்டி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது? என்றார் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு இடதுசாரி. நம்ம ஊர் ரோட்ல பால் வண்டி கூட போறது இல்லை, அதைக் குறுக்காட்டி என்ன பிரயோசனம், வேற ஏதாவது சொல்லுங்க என்றார் நாட்டாமை. பேசாம பவர் ஸ்டாரை வர்ற தேர்தல்ல நம்ம தொகுதி எம்பி ஆக்கிடறோம்னு சொல்லி படத்தை இங்கே ரிலீஸ் பண்ண வேண்டாம்னு சொல்லிடலாமா? என்றார் ஆளுங்கட்சி அன்பர். யோவ் பிரச்சனை பன்றது நம்ம ஊர் தியேட்டர் ஓனர், அவருக்கு ஏதாவது வழி சொல்லுங்க என்று சண்டைக்கு வந்தார் எதிர்க்கட்சி நண்பர். சண்டை போடாதீங்க, நாட்டாமை நல்ல தீர்ப்பா சொல்லுவார் என்றார் தெலுங்கு பவர் ஸ்டாரின் ரசிகர் ஒருவர்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின் நாட்டாமை வாயைத் திறந்தார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி நாமெல்லாம் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆகிறது தான். மதுரைல அவரு தலைமையில் ஐந்து இலட்சம் பேர் மன்றத்துல இணையுறாங்களாம். நாமும் இணைஞ்சு அவர்கிட்டே கோரிக்கை வைப்போம் உங்க படத்தை தமிழ் நாட்டைத் தவிர எங்கு வேணும்னாலும் ரிலீஸ் பண்ணுங்கன்னு! இது தான் இந்த நாட்டாமையோட தீர்ப்புன்னு சொல்லிட்டு தன்னோட செல் போனை எடுத்திட்டு தனியாய்ப் போனார். அப்படியே பவர் ஸ்டாருக்கு போனைப் போட்டு சார் நான் இரண்டாயிரம் பேரை உங்க மன்றத்துல இணைக்கிறேன், சொன்னபடி பணம் வந்திடும்ல எனக்கேட்டு உறுதி செய்துகொண்டார்..