குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Wednesday, July 31, 2013

ஐடி துறையும் படித்த மக்களும்

நாடே ஐடி துறையினரை வெறுத்துப் பார்ப்பதாய் தோன்றுகிறது. ஏன் இப்படி ஒரு சமூக மக்கள் வாழ்கிறார்கள், அவர்களால் மற்றவர்களுக்கும் தொல்லை என மற்றவர்கள் நினைப்பதாகவே தோன்றுகிறது.

நேற்று சுப்ரஜா ஸ்ரீதரன் அவர்கள் கீழ்க்கண்டவாறு பேஸ்புக்கில் எழுதி இருந்தார்.

'நான் இல்லையென்றால் உலகம் அழிந்து போகும்' என்கிற இறுமாப்பு கொண்ட ஐ.டி.தலைமுறையினர் சிலர் தற்கொலை செய்து கொள்வதால் உலகின் சுழற்சியை நிறுத்தி விட முடியுமா?

https://www.facebook.com/suprajaa.sridaran/posts/534759176579741

அதாவது ஐடி மக்கள் தற்கொலை செய்துகொள்வது இறுமாப்பு, அகங்காரம், அகந்தை போன்றவை தான் காரணிகளே ஒழிய அவர்களின் பணி, சூழல், தனிமை, விரக்தி, காதல் போன்ற எந்த மனித உணர்வு சார்ந்த ஒன்றும் காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார். அங்கே கமெண்ட் போட்ட அன்பர்களும் சரி அதை ஆதரித்தே பேசியிருந்தனர். அதாவது ஐடி துறையினர் அதிக சம்பளம் வாங்குகின்றனர், அவர்கள் செருப்பு தைக்கும் சகோதரனைவிட பெரிய ஆட்கள் கிடையாது, இன்ன பிற.. அதிலும் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு மேதாவி சொல்லியிருந்தார், 38 வயதுக்கு மேல் உங்களை அங்கே பணியாற்ற விட மாட்டார்கள் என..

ஏதோ அவரின் நண்பருக்கு நடந்த பழிவாங்கல் பற்றி சொல்கிறார். அதுவும் கூட பழிவாங்கல் என்பது காதலால் வந்ததே அன்றி அகந்தை/இறுமாப்பு எல்லாம் காணோம். அவர் என்ன சொல்ல வர்றார் என்பதை அவர்தான் விளக்கி சொல்ல வேண்டும்.

ஐடி மற்றும் அங்கே பணிபுரிபவர்கள் பற்றி எந்த அடிப்படை தகவலும் தெரியாமல் போகிற போக்கில் இதுபோல கமெண்ட் அடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. டக் பண்ணி ஷூ போட்டு ஐடி கார்டு போட்டுட்டு போறவன் எல்லாம் ஐடி துறையினர் என்பதே அவர்கள் எண்ணம். இது படிக்காத மக்களும் சரி  படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி எல்லோருமே ஒரே எண்ணத்தில் தான் இருக்கின்றனர். வீட்டு வாடகையில் இருந்து ஆட்டோக்காரர் வரை எப்படி எங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் வசமாக மறந்து விட்டார்கள்.

அங்கே எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கின்றோம் என்பதை இவர்கள் அறிவதே இல்லை. கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து கீ போர்ட்ல தட்டுறதுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என்பதே இவர்களின் வாதம். இது முக்கியமாக ஏற்கனவே பணியில் அதுவும் அரசுப் பணியில் இருப்பவர்களை ரொம்ப பாதித்து உள்ளது போலும். அவர்களின் சம்பளத்தை ஐடி சம்பளத்துடன் ஒப்பிட்டு இது போன்ற கமெண்ட்களை வீசி செல்கின்றனர் என நினைக்கிறேன். இவர்கள் தான் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

இரவு விடிய விடிய கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள், அதிலும் குறிப்பாக வெளிநாட்டு கஸ்டமர் கேரில் இருப்பவர்கள் படும் கஷ்டம் இவர்களுக்குத் தெரியுமா? வெள்ளைக்காரன் கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டுவதை கேட்டுக் கொண்டே அவனுக்கு பதில் சொல்ல வேண்டும். மொத்தமாய் பத்து நிமிஷ பிரேக், அதிலும் சிகரெட் ஊதி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள் அது தெரியமா? டெட்-லைன் என்ற வார்த்தையை நினைத்தே தூங்காமல் 48 ~ 72 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களைப் பற்றி தெரியுமா? இது போக ஒரு நாளைக்கு மொத்தமே 45 நிமிஷம் மட்டுமே பிரேக் கொடுக்கும் BPO/KPO பற்றித் தெரியுமா?

அடுத்தது சம்பளம். இப்போது ஐடியில் சம்பளத்தை முன்போல தூக்கிக் கொடுப்பது இல்லை. நீங்கள் நினைக்கும் இலகரங்களில் சம்பளம் எல்லாம் பத்து இருவது வருஷத்திற்கு முன்னால் நடந்ததாக இருக்கலாம். எதற்கும் இதை ஒருமுறை படித்துப் பாருங்க.. http://www.nisaptham.com/2013/07/blog-post_18.html

உயரமான இடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி உள்ளது, அதுவும் ஐடி துறையினர் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். - இது செய்தி.. இதற்கான அடிப்படை காரணத்தை அலசாமல் வேறு எதையோ பேசுவது அவர்களின் காழ்ப்புணர்ச்சி, வயிற்றெரிச்சல், பொறாமை போன்றவற்றையே காட்டுகிறது..

எனக்கு தெரிந்த வரையில் பணி, வேலைப்பளு, தனிமை, காதல், விரக்தி போன்ற ஏதாவது ஒன்றே முக்கிய காரணமாக இருக்க முடியும். இதைப் பற்றி அலச நான் ஒன்றும் மனோத்ததுவ நிபுணரும் இல்லை.

தொடரும்...

2 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

பகிர்வுக்கு நன்றி...

Prabu M said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா......
ஐ.டியைப் பொறுத்தவரை நிழல்களும் அனுமானங்களும்தான் இன்னும்கூட சமுதாயத்தில் அதிகமாக இருக்கின்றது..
நிஜத்தில் ஐ.டி த்துறையின் சாமானியனும் சாதாரண மனிதன்தான் என்று நிதர்சனத்தை இன்னும் யாரும் ஆவணம் செய்யவில்லை! இது துரதிர்ஷ்டம்தான் என்றாலும்....... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!!