குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Monday, July 18, 2011

காதல் வாகனம்

 பள்ளி முடித்து கல்லூரியில் செல்ல தொடங்கியிருந்த நேரம். நானும் நண்பன் சாமியும் சரக்கு அடிக்கும்போது கூட சண்டை போடாத அளவுக்கு இணைபிரியா நண்பர்கள். நான் என்ஜினீரிங் காலேஜில் சேர்ந்திருந்தேன். நண்பன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாரதிதாசன் ஆர்ட்ஸ் காலேஜுக்கு போய் வந்தான். அப்போது அவனுக்கு காலேஜ் ஆரம்பிச்சு ஒரு மாதம் இருக்கும். எனக்கு அப்போது காலேஜ் ஆரம்பிக்கவில்லை. தினமும் காலையில் எட்டு மணிக்கு கோபிக்கு போகும் ஒரு பிரைவேட் டவுன் பஸ்சில் தான் காலேஜ் போவான். அப்படி போகும் போது ஒரு நாள் அந்த பஸ்சில் இருக்கும் ஒரு பொண்ணு அவனைப் பார்த்து சிரித்திருக்கிறாள். அன்றிரவே ட்ரீட் கொடுத்தான் நண்பன். நானும் மற்ற இரண்டு நண்பர்களும் மாப்ளே நீ அழகாத் தானே இருக்கே, டிரை பன்றா என ஏத்தி விட்டோம். பங்காளி நாளைக்கு நீ நாகாவோட பைக்கை எடுத்திட்டு போய் கொஞ்சமா சீன் போடுறா என்றார் மணி. மணி, இவர் நம்ம சாமிக்கு பங்காளி. எங்களுக்கு அண்ணன் மாதிரி.



எனக்கு அப்போது தான் என் அப்பாவுடைய யமஹா RX100 அவரிடமிருந்து கிடைத்திருந்தது. அது 1987 வருஷத்த பழைய யமஹா. ஆனால் அப்பாவே ஓட்டியதால் பார்க்கிறதுக்கு கொஞ்சம் நல்லா இருந்தது. அடுத்த நாள் காலையில் சாமி என்னோட பைக்கை எடுத்திட்டு போனான். பஸ் ஸ்டாப்ல பஸ் நின்னா அவனும் நிப்பான். பஸ் போனா அவனும் பஸ் பின்னாடி இல்லனா முன்னாடி போவான். இப்படியே கோபி வரைக்கும் போனான். கச்சேரிமேடு பஸ் ஸ்டாப்ல அந்த பொண்ணு இறங்கி பழனியம்மாள் ஸ்கூலுக்கு போனாள். இவனும் அந்த ஸ்கூல் கேட் வரைக்கும் அவ பின்னாலேயே போயிட்டு, பைக்கை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற எங்க நண்பனோட பிரவ்சிங் சென்டர்ல நிறுத்திட்டு காலேஜ் பஸ்ல காலேஜ் போயிட்டான். அப்புறம் ஈவ்னிங் பஸ் ஸ்டாண்டுல அந்த பொண்ணு பஸ் ஏறுகிற வரை சைட்டடிப்பான். அதற்கு அப்புறம் அந்த பஸ்ஸை ஃபாலோ பண்ணுவான்.


இப்படியே ஒரு வாரம் ஓடிடுச்சு. அந்தப் பொண்ணும் இவனைப் பார்த்து சிரிச்சு பேசுற அளவுக்கு முன்னேறிட்டான். அந்த வார சனிக்கிழமை நான் அவனிடம் மாப்ளே அடுத்த வாரத்துல இருந்து எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகிடும்டான்னு சொன்னேன். அதற்கு சாமி அப்போ நானும் ஒரு யமஹா RX வாங்கிடுறேண்டான்னு சொன்னான். அன்னைக்கே பைக் வாங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு களத்துல இறங்கினோம். 86 இல்லனா 87 வருஷத்த வண்டி வாங்கலாம் (அதில் தான் ஜப்பான் இன்ஜின், ஜப்பான் கார்பரேட்டர் இருக்கும்) என முடிவு செய்தோம். நம்ம மணி அண்ணன் அவரோட நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு கேட்டார். நானும் சாமியும் சத்தியமங்கலத்தில் ஆரம்பித்து மேட்டுப் பாளையம், புளியம்பட்டி, நம்பியூர் இப்படி ஒரு ரவுண்டு வந்தோம். ஒண்ணும் தேறல. மச்சி நான் திங்கள் லீவு போடுறேன். நாம ரெண்டு பேரும் கோபி, ஈரோடு போய் பார்க்கலாண்டா என்றான் சாமி.

திங்கள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி கோபி போனோம். அங்கே சாமியின் கல்லூரி நண்பன் ஒருவன் அந்தியூரில் ஒரு 87 வருஷத்த வண்டி இருப்பதாய் சொன்னான். அப்படியே அந்தியூர் போனோம். அந்த வண்டி ஒரு பெரியவரிடம் இருந்தது. அவர் உங்களை மாதிரி இளவட்ட பசங்களுக்கு நான் இந்த வண்டியை தரமுடியாதுன்னு சொல்லிட்டார். அப்புறம்  ஒரு வழியா பேசி முடிச்சு வண்டியை வாங்கிட்டு கோபி சாயந்திரம் வந்து சேர்ந்தோம். நம்ம சாமி பஸ் ஸ்டாண்டுல அவனோட வண்டில ஒரு அரை மணி நேரம் சீன் போட்டான். அப்புறம் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணி எங்க ஊருக்கு வந்தோம். வந்த உடனே நம்ம மெக்கானிக்கிட்டே சொல்லி சைலன்சர் ஆல்டர் பண்ணினான்.


அடுத்த நாள் வழக்கம் போல பஸ்ஸை ஃபாலோ பண்ணிப் போய் கச்சேரிமேட்டுல அந்தப் பொண்ணுகிட்டே பேசி இருக்கான். நான் இந்த வண்டியை வாங்கிட்டேன், வா உன்னை ஸ்கூல்ல டிராப் பண்றேன்னு சொல்லிருக்கான். அதற்கு அந்தப் பொண்ணு இது நாகாவோட வண்டி தானே? அவரு வரலையா? அவங்கள கேட்டதா சொல்லுங்க அண்ணேன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு. அன்னைக்கு நைட்டுத் தான் பீரையும் பிராந்தியையும் மிக்ஸ் பண்ணி அடிச்சா போதை தலைக்கேறும்னு தெரிஞ்சுகிட்டோம்.

--தொடரும்